
கணினி உலகை கலவரப்படுத்திக் கொண்டுள்ளது இந்த Conficker கணினி Worm. கணினி தொழில்நுட்பத்தில் Worm என்பது தன்னை போலவே மற்றொரு பிரதியை உருவாக்கி கொள்ளும் ஊறு விளைவிக்க கூடிய சிறிய கணினி மென்பொருள்.முக்கியமாக நெட்வொர்க் இணைப்புகளில் உள்ள கணினிகளை குறி வைத்து அவற்றுள் சென்று ஒளிந்து கொண்டு பின்னர் இதனுடன் இணைக்கப்பட்ட Payload எனும் சிறிய கணினி நிரல் கட்டளைகளை ஏற்று அதன்படி செயலாற்றும்.இதை போன்ற ஒரு கணினி worm தான் Conficker.
பொதுவாக வோர்ம்கள் முதலில் பரவி பிறகு,அதை அனுப்பியவர்களில் கட்டளைக்காக காத்திருக்கும் அல்லது Payload எனப்படும் worm உடன் இணைந்த சிறிய கணினி கட்டளை நிரல் அது என்ன செய்ய வேண்டும் என ஆணையிடும்.Conficker விஷயத்தில் இதுவரை அதை உருவாக்கியது யார்,எங்கிருந்து வந்தது,என்ன செய்ய போகிறது,அதையும் எப்போது செய்யும் என யாருக்கும் தெரியாது.கண்டுபிடிக்கவும் முடியவில்லை.படு புத்திசாலித்தனமாக, மிக கடினமான கணித அல்காரிதம்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கணினி வல்லுனர்கள் கூறுகின்றனர்.
சென்ற ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி இந்த Conficker.A வோர்ம் பரவ ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.இது பரவ விண்டோஸ் கணினிகளில் உள்ள சிறிய பாதுகாப்பு குறைபாடு முக்கிய காரணமாக இருக்கிறது.நெட்வொர்க் கணினிகளில் உள்ள பலவீனமான பாஸ்வோர்ட்களை உடைத்து உள்ளே புகும்.அதன் பிறகு தன்னை தானே பிரதி எடுத்து நெட்வொர்க்கில் உள்ள கணினிகள் மற்றும் USB டிரைவ் பயன்படுத்தும்போது மற்ற கணினிகளுக்கும் பரவ ஆரம்பிக்கிறது.சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் இதன் அடுத்த பதிப்பாக Conficker.B பரவ ஆரம்பித்தது.பின்னர் உச்சமாக கடந்த பிப்ரவரி மாதம் Conficker.C,இது தான் சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது,பரவியது.இவை ஒரே வோர்மின் மேம்படுத்த பட்ட மென்பொருட்கள்.உடனடியாக மைக்ரோசாப்ட் நிறுவனம் patch களை கொடுக்க ஆரம்பித்தது.
Sophos நிறுவனத்தின் கணினி பாதுகாப்பு வல்லுநர் கிரகாம் க்ளுலே(Graham Cluley) கூறும் போது, "இது உலகம் முழுவதும்,தாக்க தயாராக உள்ள ஒரு கணினி ராணுவத்தை உருவாக்கி வைத்திருப்பது போல் தோன்றுகிறது" என்கிறார்.இந்நிலையில் தான் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி அன்று இந்த வோர்ம் உலகம் முழுவதும் பரவியுள்ளதாக கருதப்படும் 90 லட்சம் கணினிகளை தாக்க போவதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.அன்று ஏதாவது செய்யும் என்று நிச்சயம் சொல்வதற்கில்லை என்கிறார் கிரகாம் க்ளுலே.வழக்கம் போல ஊடகங்கள் கலவரப்படுத்தி கொண்டுள்ளன.ஆனால் ஒரு நாளில் mphtfrxs.net, imctaef.cc,hcweu.org,sdksjiewl.com இப்படி 50,000 க்கும் அதிகமான டொமைன் பெயர்களை கொண்ட போலியான தளங்களுக்கு தொடர்புகளை ஏற்படுத்தும்.ஆனால் அவற்றில் ஒன்றே ஒன்றுதான் இதை அனுப்பியவரின் தளமாக இருக்கலாம் என தெரிகிறது.
மேலே சொன்ன ஒரு நாளில் 50,000 தளங்களை தொடர்பு கொள்ள ஆரம்பித்து அவற்றில் உள்ள ஒரே ஒரு தளத்திலிருந்து அது என்ன செய்ய வேண்டும் என கட்டளைகளை வாங்க ஆரம்பிக்கலாம்.அப்படி ஆரம்பித்தால்,நூற்றுக்கணக்கான Spam மின்னஞ்சல்களை அனுப்புவது,மேலும் பலவீனமான பாஸ்வேர்டுகளை உடைத்து மேலும் தன்னை மேம்படுத்திக்கொண்டு புகுவது,நெட்வொர்க் இணைப்புகளை பலவீனமாக்கி,தகவல் பரிமாற்றத்தை தடை செய்வது,இதை ஒரு சைபர் ஆயுதமாக பயன்படுத்தி அரசாங்க தளங்களை தாக்குவது போன்ற செயல்களை செய்ய ஆரம்பிக்கலாம் என கணினி வல்லுனர்கள் பல சாத்தியங்களை கூறுகின்றனர்.ஏற்கனவே இங்கிலாந்தின் பாராளுமன்ற கணினி அமைப்பில் புகுந்துள்ளது Conficker வோர்ம்.
Symantec நிறுவனத்தின் கருத்துப்படி ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு Conficker C தாக்கிய கணினி மைக்ரோசாப்ட்டின் பாதுகாப்பு Updates பெறமுடியாதபடி தடுக்கலாம்.மேலும் அதை உருவாகியவர்கள் உடைப்பதற்கு மிக கடினமான முறையை கொண்டு ஒளிந்து கொண்டுள்ள வோர்ம்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம் என கூறுகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த Conficker வோர்மை கண்டுபிடித்தவர் பற்றிய தகவல்களை ஆராய்ந்து கூறினால் $ 250,000 டாலர்கள் பரிசு தரப்போவதாக கூறியுள்ளது.
Conficker வோர்மை தடுக்க விண்டோஸ் இன் Updates களை உடனுக்குடன் நிறுவ வேண்டும்.Symantec,Mcafee நிறுவனங்கள் ஏற்கனவே இந்த Conficker வோர்மை அழிக்கும் Updates களை கொடுத்துள்ளன.





















































